August 9, 2009

Mumbai Meri Jaan. (வாழ்க்கையின் தருணங்களில் ஒரு பயணம்)


வலைபதிவில் பதிவு போட்டு ஒரு மாதத்துக்கு மேல ஆச்சு...எல்லோரும் என்னை முதல்ல மன்னிச்சுடுங்க...வேலை பளூ காரணத்தால் என்னால் படம் பார்க்க நேரமில்லை... இருந்தபோதும் என் பொட்டியில் படங்களை சேர்க்க தவறுவது இல்லை...அப்படி நான் சேர்த்த படங்களில் இருந்து நேற்று ஒரு படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது... படம் பார்த்து முடித்த பின் நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல படம் பார்த்த ஒரு............இன்னியும் உங்களை காக்க (அறுக்க) விரும்பல.... படம் 2008-ல் வெளிவந்த Mumbai Meri Jaan.


11, ஜூலை 2006 - மின்சார ரயில்களில் தொடர் குண்டுவெடிப்புகளால் மும்பை மாநகரம் ஸ்தம்பித்த நாள். அந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம், தனிமனித வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைக்கிறது, இத்தகைய கொடூரங்களிலிருந்து ஒரு நகரமும் அதில் வாழ் மக்களும் எப்படி தங்களை மீட்டெடுக்கிறார்கள் என்பதை ஆறு வெவ்வேறு கதாபாத்திரங்கள் மூலமாக திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குனர் நிஷிகாந்த் காமத் எவனோ ஒருவன்).




துக்காராம் பாட்டீல்(பரேஷ் ராவல்) ஓய்வு பெறப் போகும் போலீஸ் கான்ஸ்டபிள். தன் பணிக்காலத்தில் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என ஒத்துக்கொள்ளும் ஒரு சராசரி காவலர். தன் நகைச்சுவையுணர்வின் மூலமும் கனிவான பேச்சின் மூலமும் சக காவலரிடமும் மக்களிடமும் அபிமானம் பெற்றவர். நிதர்சனத்தை உணர்ந்து அதற்கேற்றாற்போல் தன் மனதை தயார்படுத்திக் கொண்ட சாதாரண மனிதர்.

ரூபாலி(சோஹா அலி கான்) தொலைக்காட்சி நிருபர். எந்த செய்தியையும் மிகைப்படுத்தி உணர்ச்சிகளை தூண்டி வியாபாரமாக்கும் சராசரி செய்தி நிருபர். அவளின் காதலன் அவள் இவ்வாறு செய்வதைக் குறை சொல்லும்போது அதை நியாயப்படுத்தும் தன் பணியும் அதில் வெற்றியும் மட்டுமே குறிக்கோளாய்க் கொண்ட இளம் நிருபர்.

இர்பான் கான் அந்தேரியில் சேரியில் வாழும் தமிழன். இரவு நேரங்களில் சைக்கிளில் டீ விற்று பிழைப்பு நடத்துபவன். தன் ஏழ்மையின் காரணமாக பல தருணங்களில் பலரின் கேலிக்கும் இளக்காரத்துக்கும் ஆளானவன். பகட்டானதொரு அங்காடியில் தன் குடும்பத்தினர் முன் அவமானப் படுத்தப்படுகிறான்.

சுரேஷ்(கே.கே.மேனன்) சேல்ஸ்மேன். கடனாளி. இந்து அடிப்படைவாதி. முஸ்லீம்களின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவன். வேலையற்ற நண்பர்களுடன் டீக்கடையில் பொழுதைக் கழிப்பவன். குண்டு வெடிப்பு நடந்த தினத்தன்று டீக்கடையில் ரகசியமாகப் பேசிக்கொண்ட மூன்று முஸ்லீம் இளைஞர்கள் மீது சந்தேகம் கொள்கிறான். இயல்பாகவே முஸ்லீம்கள் மீது வெறுப்பு கொண்ட சுரேஷ் அவர்கள் ஏதோ சதித்திட்டம் தீட்டுவதாக எண்ணுகிறான்.

நிகில்(மாதவன்) மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிபவன். வெளிநாட்டு வாய்ப்புகளை உதறிவிட்டு மும்பையில் வேலை செய்யும் நடுத்தர வயது இளைஞன். சுற்றுப்புற தூய்மை பற்றி கவலை கொள்கிறான். தினமும் அலுவலகத்துக்கு மின்சார ரயிலில் சென்று வருகிறான். ப்ளாஸ்டிக் உபயோகிப்பதைத் தவிர்க்கச் சொல்லி மற்றவர்களை அறிவுறுத்துகிறான்.

சுனில் கதம்(விஜய் மெளரியா) புதிதாக காவல்துறையில் சேர்ந்து துக்காராமுடன் பணிபுரியும் இளம் காவலர். சாதிக்கும் வெறியும் காவல்துறைக்கு தன்னாலான பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்ற உத்வேகமும் கொண்ட இளைஞர். ஆனால் மேலதிகாரிகளின் ஆணையால் பல சமயங்களில் கைகள் கட்டப்பட்டு அதனால் துறையின் மீது வெறுப்புடனும் சுயபச்சாதபத்துடனும் தவிப்பவர்.

ஜூலை 11, 2006 அன்று நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் இந்த ஆறு பேரின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைக்கிறது, அதன் தாக்கம், அதிலிருந்து இவர்கள் எவ்வாறு மீள்கிறார்கள் என்பதை சிறப்பான திரைக்கதையின் மூலம் படமாக்கியிருக்கிறார்கள்.




தினமும் மின்சார ரயிலில் பயணம் செய்த நிகில் ரயில்களைக் கண்டு அச்சம் கொள்கிறான். பாதுகாப்பின்மையுணர்வால் தூக்கமின்றி தவிக்கிறான். பொது இடங்களில் பார்ப்பவரையெல்லாம் சந்தேகிக்கின்றான்.

இர்பான் குண்டுவெடிப்பினால் நேரடியாக பாதிக்கப்படாவிட்டாலும் தன்னை அவமானப்படுத்தியவர்களை பழிவாங்க எல்லோர் மனதிலும் உள்ள பயத்தைப் பயன்படுத்திக் கொள்கிறான். அங்காடிகளில் வெடிகுண்டு இருப்பதாக பொய்யாக போலிசுக்கு தகவல் சொல்லி அதில் மகிழ்ச்சியடைகிறான்.


ஏற்கனவே முஸ்லீம்களின் மீது வெறுப்பு கொண்ட சுரேஷ் டீக்கடையில் தான் பார்த்த நபர்களே குண்டு வெடிப்புக்கு காரணமென முடிவு செய்து அவர்களைத் தேடி அலைகிறான். சாலையில் கடக்கும் வயதான முஸ்லீமையும் சந்தேகத்துடன் விசாரிக்கிறான். தன் வேலையையும் கடனையும் மறந்துவிட்டு வெறிகொண்டு அலைகிறான்.






ரூபாலியின் காதலன் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழக்கிறான். இதுநாள் வரை அடுத்தவரின் துயரை அறியாமல் அதை உணர்ச்சி நாடகமாக்கி தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய ரூபாலிக்கு தான் செய்துவந்த செயல் உறைக்கின்றது. ஆனாலும் ரூபாலியின் தொலைக்காட்சி நிர்வாகிகள் அவளை வைத்தே நிகழ்ச்சி நடத்தி டி.ஆர்.பியைக் கூட்ட நினைக்கின்றனர்.






வெடிகுண்டு தாக்குதலினால் துக்காராமும் சுனிலும் இரவு ரோந்துப்பணியில் ஈடுபடுகின்றனர். சந்தேகத்திடமானவர்களை விசாரிக்கும்போது தாக்கப்படுகிறார்கள். போதை மருந்து உட்கொண்டவனைக் கைது செய்யும் போது உயரதிகாரிகளின் தலையீட்டால் பின்வாங்க நேருகிறது. சுனில் இதனால் ஆத்திரமும் தன்னால் எதுவும் செய்யமுடியவில்லை என்று கழிவிரக்கம் கொள்கிறான்.

பணியினூடே சுனிலுக்கு தன் அனுபவங்களைப் பகிர்கிறார். நிதர்சனத்தை உணர்த்துகிறார். இத்தனை வருட காவல்துறை சேவையில் தான் இதுவரை ஒருவரையும் சுட்டதில்லையென்றும் சொல்லிக்கொள்ளும்படி சாதனை எதுவும் செய்துவிடவில்லையென்றும் அதனால் தனக்கு வருத்தமும் இல்லையென்றும் தன் அனுபவத்தைப் பகிர்ந்து அறிவுரைகள் மூலம் சுனிலின் ஆதங்கத்தையும் ஆத்திரத்தையும் மட்டுப்படுத்துகிறார்.


இந்த ஆறு கதாபாத்திரங்களின் கதைகளும் தனித்தனியாக சொல்லப்படுகிறது. அவர்களை இணைக்கும் களமாக வெடிகுண்டு தாக்குதல். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அத்தனை பேரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்.

கூர்மையான வசனங்கள் படத்தின் பெரும்பலம். குறிப்பாக சற்று நகைச்சுவையுடன் கூடிய காவலரான துக்காராமின் வசனங்கள். பெரும்பாலான காட்சிகள் துக்காரமை மையமாகக் கொண்டே நகர்கின்றன. தேவையற்ற பாடல் காட்சிகளோ நகைச்சுவைக் காட்சிகளோ திணிக்கப்படாமல் இயல்பாகப் படமாக்கப்பட்டுள்ளது. ஆறு கதாபாத்திரங்களின் கதையை மாற்றி மாற்றிச் சொன்னாலும் திரைக்கதை தொய்வில்லாமல் அமைந்திருக்கின்றது. கதாபாத்திரங்கள் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

Mumbai Meri Jaan - கதைக்களத்துக்காகவும் நேர்த்தியான திரைக்கதைக்காகவும் கண்டிப்பாக பார்க்கலாம்.