January 31, 2010

THE BUCKET LIST (2007) - எண்ணங்களுக்காகவும் சில புரிதல்களுக்காகவும்.


வாழ்க்கை குறித்தும் வயோதிகம் குறித்தும் மரணம் குறித்துமான எண்ணங்களுக்காகவும் சில புரிதல்களுக்காகவும்.

மரணம் குறித்தான பயம் எப்போதும் அடிமனதில் குடிகொண்டிருக்கிறது. அதிலும் மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நாட்களில் இதுநாள் வரை கடந்து வந்த பாதைகளும் மரணத்திற்கு பிறகான புதிரும் மனதை அலைக்கழித்தபடியே இருக்கின்றன. பழைய நினைவுகளும் தவறவிட்ட வாய்ப்புகளும் நிராசைகளும் செய்ய நினைத்திருக்கும் காரியங்களும் வயோதிகத்தை கொடிய நோயாக்கிவிடுகின்றன. இறப்பதற்கு முன் அடைந்துவிடக்கூடியவற்றை மனம் பட்டியலிட்டபடி இருக்கிறது. மனித வாழ்க்கை குறித்த தத்துவார்த்தமான சிந்தனைகளும் அதே நேரத்தில் எஞ்சியிருக்கும் நாட்களில் மனநிறைவோடு வாழ்ந்து மரணத்தை திருப்தியுடன் எதிர்கொள்வது குறித்தான எண்ணங்களும் முட்டி மோதுகின்றன. மரணம் நெருங்கியதை உணர்ந்ததும் தன் சுற்றத்தாருக்கும் உறவினருக்காகவுமே காலமெல்லாம் உழைத்தவர்கள் தங்களுக்காகவும், சுயநலமாக தனக்காக மட்டுமே வாழ்ந்தவர்கள் அடுத்தவர்க்காகவும் வாழ ஆரம்பிக்கிறார்கள். மரணம் இது குறித்தான பிரக்ஞை எதுவுமின்றி அவர்களை அரவணைத்து சென்றுவிடுகிறது.


புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரண தேதி குறிக்கப்பட்ட எட்வர்ட் கோல்(Edward Cole), கார்ட்டர் சேம்பர்ஸ்(Carter Chambers) என்ற இரண்டு முதியவர்களின் வாழ்வில் கடைசி சில மாதங்களை பதிவாக்கியிருக்கும் திரைப்படம் The Bucket List.

கார்ட்டர் சேம்பர்ஸ் கார் மெக்கானிக். அன்பான மனைவி. மூன்று பிள்ளைகள். புகை பிடிக்கும் பழக்கத்தால் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார். எட்வர்ட் கோல் மருத்துவமனைகள் நடத்திவரும் கோடீஸ்வரர். நான்கு முறை மணமுறிந்து தன்னந்தனியாக வாழ்பவர். தன்னுடைய மருத்துவமனைகளில் ஒவ்வொரு அறையிலும் இரண்டு படுக்கைகள் அமைத்து பணம் பார்ப்பவர். இவரையும் புற்றுநோய் தாக்க கார்ட்டரும் எட்வர்ட்டும் மருத்துவமனையில் ஒரே அறையில் தங்க வைக்கப்படுகிறார்கள். உயிர்கொல்லி புற்றுநோயால் இருவருக்குமே சில மாதங்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறது.

கார்ட்டர் தன் மரணத்திற்கு முன் நிறைவேற்ற வேண்டிய ஆசைகளை பட்டியலிடுகிறார்.(Bucket List;'Kick the bucket'). நிறைவேற்ற இயலாதவற்றையும் தன் மன திருப்திக்காகப் பட்டியலிடுகிறார். அதைப் பார்த்துவிடும் எட்வர்ட் இருவருமாக சேர்ந்து அந்த பட்டியலில் உள்ளவற்றை செய்துவிட வேண்டுமென்கிறார். தன் பங்கிற்கு தன்னுடைய ஆசைகளையும் பட்டியலிடுகிறார். முதலில் மறுக்கும் கார்ட்டர் எட்வர்ட்டின் வற்புறுத்தலால் ஒத்துக்கொள்ள, கார்ட்டர் மனைவியின் எதிர்ப்பையும் மீறி இருவரும் மருத்துவமனையில் இருந்து கிளம்புகிறார்கள். விமானத்திலிருந்து குதிப்பது, அதிவேகமாக கார் ஓட்டுவது, பல்வேறு நாடுகளைச் சுற்றித் திரிவது, இமாலயத்தைப் பார்ப்பது, முன்பின் தெரியாத அந்நியருக்கு உதவுவது, கண்ணில் நீர் வரும்வரை சிரிப்பதென விருப்ப பட்டியலை தயாரித்து ஒவ்வொன்றாக நிறைவேற்றுகிறார்கள். விருப்பப் பட்டியல் முடியும் நிலையில் குறுகிய நாட்களில் தங்களிடையே உருவாகியிருக்கும் நட்பை உணர்கிறார்கள். இறக்கும் முன் மனதுக்கு நிறைவாக வாழ்ந்த நாட்களை எண்ணி மகிழ்கிறார்கள். மரணிக்கிறார்கள்.

எண்ணங்களிலும் வாழ்க்கை முறையிலும் முற்றிலும் மாறுபட்ட இரண்டு மனிதர்கள் மரணத்தால் ஒன்றுபடுகிறார்கள். 'வண்டிச் சக்கரம் போல் காலம் சுழன்றுகொண்டேயிருக்கிறது அவரவர் வாழ்ந்து இறந்துகொண்டிருக்கிறோம்' என்ற எண்ணமுடைய எட்வர்ட்டும் 'நம் வாழ்வின் அளவீடு அடுத்தவர் வாழ்வில் நாம் ஏற்படுத்தும் பங்களிப்பை வைத்தே' எனும் கார்ட்டரும் பயணத்தினூடே தங்களது கடந்த கால வாழ்க்கை குறித்த உரையாடல்களும் வாழ்க்கையைக் குறித்தும் மரணம் குறிததுமான எண்ணப் பகிர்வுகளாகவும் திரைப்படம் நகர்கிறது.
மரணத்திற்காகக் காத்திருக்கும் இரண்டு வயோதிகர்களின் கதை என்றாலும் மரணத்தின் வாசனையில்லாமல் திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு. தத்துவார்த்தமான உரையாடல்களிலும் மெல்லிய நகைச்சுவை நிறைந்திருக்கிறது. குறிப்பாக எட்வர்ட்டுக்கும் அவரது உதவியாளர் தாமஸுக்குமான நக்கல் நையாண்டி உரையாடல்கள் அட்டகாசம்.

எட்வர்ட் கோல்'லாக ஜாக் நிக்கல்சன்(Jack Nicholson). கார்ட்டர் சேம்பர்ஸாக மார்கன் ஃப்ரீமேன்(Morgan Freeman). இரண்டு மிகச் சிறந்த நடிகர்கள் திரைப்படத்தை தாங்கிப் பிடிக்கிறார்கள். சொல்லப்போனால் படத்தைப் பார்க்க ஆரம்பித்ததே இவ்விருவருக்காகத்தான். இரண்டாம் பாதியில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும் இவ்விருவரின் முக பாவங்களும் வசன உச்சரிப்பும் அதை மறக்கச் செய்கின்றன.

January 20, 2010

முத்திரை- (2009)


திமிழில் இப்போழுதெல்லாம் சிறிய தயாரிப்புபடங்கள் எல்லாம் என்னை மிகவும் கவரபடுகின்றன..அப்படி என்னை கவர்ந்த படம் தான் இந்தப்படம்...எனக்கு தெரிந்து இங்கு இந்த படத்திற்க்கு பெரிய விளம்பரம் எதுவும் செய்யவில்லை..தற்செயல்லாக வலையில் எதையோ தேடும் போது கிடைத்து...

திருட்டு, கொலை, என்கவுண்‌ட்டர் என நெகடிவ் விஷயங்களை வைத்தே தனது முதல் படம் இயக்குனர் ஸ்ரீநாத். நிதின் சத்யாவின் காமெடியும், ராக்கி சாவந்த், லட்சுமிராயின் கவர்ச்சியும் படத்தின் எக்ஸ்ட்ரா போனஸ்.

லோக்கல் பர்ஸ் திருடன் நிதின் சத்யா. ஹைடெக் பாஸ்போர்ட் திருடன் டேனியல் பாலா‌ஜி. இவர்கள் இணைந்து காஸ்‌ட்லியாக கல்லாகட்ட நினைக்கும்போது வழியே போகும் ஒருவனால் வம்பில் மாட்டிக் கொள்கிறார்கள். ஒரு லேப்டாப்பால் வரும் அந்தப் பிரச்சனை நான் ஸ்டாப்பாக துரத்த, இருவரும் எப்படி அதிலிருந்து எஸ்ஸாகிறார்கள் என்பது கதை.

டேனியல் பாலா‌ஜிக்கு முதல் ஹீரோ அனுபவம். தெனாவட்டாக தி‌ரிகிறவர் லட்சுமிராயின் முன் ஈரத்துணி போர்த்திய கோழியாக பம்முவதும், அதற்கு காரணமான திருமண ப்ளாஷ்பேக்கும் இனிமையான அதிர்ச்சி. இந்த மூஞ்சியைப் பார்த்தா சிபிஐ ஆபிசர் போலவா இருக்கு என்று மஞ்ச‌ரியிடம் நிதின் சத்யாவை கலாய்க்கும் இடத்தில் டேனியலுக்கு காமெடி டைமிங் கைகூடி வந்திருக்கிறது.

கோவில் உண்டியலில் கைவைத்து ஊரா‌ரிடமிருந்து தப்பித்து ஓடிவரும் நிதின் சத்யா முதல் காட்சியிலேயே மனசுக்குள் ப்ரேம் போட்டு உட்கார்ந்து விடுகிறார். சிபிஐ ஆபிஸர் என்று அவர் விடும் அலப்பறைக்கு திரையரங்குக்குள் சி‌ரிப்பலை. மஞ்ச‌‌ரியை கவர அவர் விடும் காதல் மாஞ்சா செம ரவுசு.

நிதினுக்கு மஞ்ச‌ரி, டேனியலுக்கு லட்சுமிராய் என கோடு கிழித்த மாதி‌ரி இரண்டு ஹீரோயின்கள். பார் டான்சராக வரும் லட்சுமிராய் கவர்ச்சி, சென்டிமெண்ட் என இரண்டிலும் பாஸ் மார்க் வாங்குகிறார்.

முதல்வரை கொலை செய்தவன் யார் என்ற த்‌ரில்லிங்கான சேஸிங் இருந்தும் திரைக்கதையில் ஆங்காங்கே தொய்வு. போலீஸ் கமிஷனராக வரும் கிஷோரின் திடீர் வில்லன் அவதாரம் அதிர்ச்சிக்குப் பதில் ஆயாசத்தையே தருகிறது.

என்கவுண்‌ட்ட‌ரில் பலியாகும் சேத்தன், முதலமைச்சர் அழகர் அதியமானாக வரும் சரவணன், அவரது தம்பி தொண்டை அதியமானாக வரும் ஆனந்த், பதவி ஆசை பிடித்த ஆதிகேசவனாக வரும் பொன்வண்ணன் என அனைவரும் தத்தமது பாத்திரமறிந்து நடித்திருக்கிறார்கள்.

கிளைமாக்ஸில் வரும் திடீர் திருப்பங்களில் உள்ளேன் ஐயா என ஆஜராகிறார் திரைக்கதையாசி‌ரியர் அனீஸ் தன்வீர். கொலையாளி யார் என்று யூகிக்க முடிவது படத்தின் மிகப் பெ‌ரிய பலவீனம். யுவனின் பாடல்களும், பின்னணி இசையும் பரவாயில்லை ரகம். சீரான இடைவெளியில் வரும் பாடல்கள் படத்தின் ஸ்பீடு பிரேக்கர்கள்.

அவ்வப்போது காணாமல் போகும் லா‌ஜிக்கை மன்னித்தால் முத்திரையை ரசிக்கலாம்.